LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 10, 2025

ஃபேஸ்புக் டைம்லைன் என்னும் நிலைக்கண்ணாடியும் நாடகமேடையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஃபேஸ்புக் டைம்லைன் என்னும்

நிலைக்கண்ணாடியும்
நாடகமேடையும்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


மிகை ஒப்பனை வரிகளின் உதவியுடன்
தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆரம்பித்தவர்
பெண்ணெனில் ஒரு பட்டாம்பூச்சியைத் தன் காதோரக் கூந்தலில் செருகிக்கொள்கிறார்
ஆணெனில் அதைத் தன் சட்டைப்பையில் சொருகிக்கொள்கிறார்.

பட்டாம்பூச்சி படபடவென சிறகுகளை பயத்தில் அடித்துக்கொள்வதைப் பார்த்து
ரத்தக்கண்ணீர் வடிப்பவர்
பெண்ணெனில் ஒரு சோகப்பாட்டு பாடுகிறார்.
ஆணெனில் கண்ணீரை அடக்கிக்கொள்ள உதடுகளும் தாடையும் இறுக
தலைகுனிந்து அமர்ந்தபடியிருக்கிறார்.

பெண்ணோ ஆணோ துயரத்திலாழ்ந்திருக்கும்போது தம் முகம் கோணலாகக்காணப்படவில்லையே என்ற கவலை இருவருக்குமே இருப்பது இயல்புதானே...

அந்த ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு கவிஞரை மறவாமல் இரண்டுநாட்களுக்கு ஒருமுறை நினைவுகூர்கிறார்கள்.
பெண் என்றால் ஆணையும் ஆண் என்றால் பெண்ணையும்
அதிகம் நினைவுகூர்வதும் இயல்புதானே.

நினைவுகூரப்படுபவர் அகில உலகம் அறிந்தவராக இருப்பதும் ஆறே ஆறு பேர் அறிந்தவராக இருப்பதும் அந்தந்த நேரத்துத் தேவையைப் பொறுத்தது.

நினைவுகூரப்படுபவர் நினைவுகூரப்படுவதாலேயே அதிகம் நினைவுகூரப்படுபவராகி அதற்கான நன்றியுணர்வில் நிர்க்கதியாகி நிற்கும் தோற்றத்தை நிலைக்கண்ணாடி பிரதிபலிக்க

தாம் ஏற்கும் பாத்திரம் அதுவேயாகிய நடை யுடை பாவனையுடன்
மேடையேறிச் செல்கிறார்.

மணியடிக்கிறது. மேலேறிச் செல்கிறது திரை.

காலவரையற்ற நாடகம் நடந்துகொண்டிருக்கிறது.

PEEPING TOMகளும் பூமிஜா(சீதா)ப் பிராட்டியும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 PEEPING TOMகளும்

பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்
ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்
ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்
அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்
இலக்கியப் பெருமான்களுக்கிடையே
இணையவழிகளில் _
இன்னும்
ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்
புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்
பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்
‘சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?
கொண்டாள்!
கொண்டாளே !!
கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது
[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது
பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]
தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது
காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்
கடத்தியவனையா வரிப்பாள்?
விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்
மெகாத்தொடர்களில்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி
மூத்த அண்ணன் இளைய அண்ணன்
வில்லியும் நல்லவளும்
ஐந்து வயதுச் சிறுமியும்
அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்
மாறி மாறிச் செய்யும்
வகைவகையான சத்தியங்கள்
சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்
இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்
தேர்ந்தெடுத்து
கோயில் வாசலில் பரத்தி
அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை
நிரூபிக்கச் சொல்லும்
மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்
மெகாத்தொடர் மாண்பாளர்களை
மெல்ல ஒரு பார்வை பார்த்து
மேலே நடக்கிறாள் பூமிஜா.
மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ
மக்களுக்குப் புரியவைக்கவோ
-ஒரு முறை நெருப்பில் இறங்கி
மீண்டாயிற்று…..
முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்
மறுபடி மறுபடி
கடத்தியவனை மருவியவளாய்க்
காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்
அவள் வனத்தில் தீ மூட்டினால்
அது தன்னை மட்டுமல்லாமல்
அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.
அவள் அறிவாள்தானே?
அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று
ஆலோசித்தபடி
அய்யனார் சிலையின் காலடியில்
வில்லனும் நல்லவனும் சேர்ந்து
மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை
(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்
அல்லது தாத்தாவாக இருக்கலாம்)
கொலைசெய்வது குறித்து காரசாரமாக
கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்
அரைத்தமாவுக் காட்சிகளைக்
கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு
வெளியேறும்போது படக்குழுவினர்
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி
அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி
'பொறுப்புத்துறப்பு' என்ற நொறுக்குத்தீனியை
சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு
துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்
புன்னகைக்கிறாள் பூமிஜா.

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

திரௌபதியின் துகிலும்

துரியோதனத் தூரிகைகளும்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எத்தனையெத்தனை அவலங்கள்
அலைச்சல்கள்
அஞ்ஞாதவாசங்கள்
மதிப்பழிப்புகள் மரணங்கள்
மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க
மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல்
கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து
நடந்துவந்த திரௌபதி
ஆங்கே யொரு கருங்கல்லில்
சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த
கோட்டோவியத்தில்
தன் கைகள் அண்ணாந்து
அபயம் தேடி உயர்ந்திருக்க
துகில் மறைக்காத மார்பகங்கள்
தொங்கிக்கொண்டிருக்கக் கண்டாள்
நிலைகுலைந்து குனிந்து பார்த்துக்கொண்டாள்
மார்பை மறைத்திருந்தது துகில்.
சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அது அரசவையில்லை.
கீழே சிதறிக்கிடந்த மனித உடலங்களை
யானை குதிரைச் சடலங்களைப்
பார்த்தாள்.
கண்ணீர் வழியத் தொடங்கியது.
தம் மக்கள் யார் மானத்தைக் காப்பாற்ற
உயிர்த்தியாகம் செய்தனரோ
அந்த மானம் அதோ கப்பலேற்றப்
பட்டிருக்கிறது.
தீட்டப்பட்டிருந்த கோடுகளின் வளைவும்
நெளிவும்
தீர்க்கமான நீட்டலும்
ஓவியனின் கைநேர்த்திக்குக் கட்டியங்கூறின.
ஆனாலுமென்ன
அவற்றில் உள்ளார்ந்து உணரக்கிடைத்த ஆணாதிக்கவெறி்
அவள் ஆன்மாவைப் பிளந்து பெருக்கிய வலி
யோலம் எட்டா வெளியில்
அதேபோல்
இன்னும் சில பாரிய ஓவியங்களுக்காகத்
தயாராகிக்கொண்டிருக்கும்
தூரிகைகள்.
1

’லைக்’ வள்ளல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ’லைக்’ வள்ளல்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கொலைகாரர்களுக்கும் தருவார் ‘LIKE’
கொல்லப்படுகிறவர்களுக்கும் தருவார் ‘LIKE’
குழந்தைகளுக்கும் தருவார் LIKE
குட்டிச்சாத்தான்களுக்கும் தருவார் LIKE
பெண்ணியவாதிக்கும் தருவார் LIKE
ஆணாதிக்கவாதிக்கும் தருவார் LIKE
கொடுமைக்கார மாமியாருக்கும் தருவார் LIKE
கொடூர மருமகளுக்கும் தருவார் LIKE
இந்தி எதிர்ப்பாளருக்கும் தருவார் LIKE
தமிழ் வெறுப்பாளருக்கும் தருவார் LIKE
மறைவேத நம்பிக்கையாளருக்கும் தருவார் LIKE
இறை மறுப்பாளருக்கும் தருவார் LIKE
வெறுப்பு அருவருப்பானது என்பாருக்கும் தருவார் LIKE
அரும்பெருமையுடையது என்பாருக்கும் தருவார் LIKE
காதல் கட்டாயம் வேண்டும் என்பாருக்கும் தருவார் LIKE
கூடவே கூடாது என்பாருக்கும் தருவார் LIKE
எழுத்தில் கண்ணியம் காப்பவருக்கும் தருவார் LIKE
கண்ணியமா மண்ணாங்கட்டி என்பாருக்கும் தருவார் LIKE.
கட்டெறும்புக்கூட்டங்களுக்கும் தருவார் LIKE
சுட்ட அப்பளங்களுக்கும் தருவார் LIKE
விட்டகுறை தொட்டகுறையாய் அவரிடம் அத்தனை LIKE
எவருக்கோ எதற்கோ தர எக்கச்சக்க LIKE
அன்றாடம் அரிசிமிட்டாயாய் அவர் இறைக்கும் LIKE
அவருக்கு என்றாவது பெற்றுத்தரலாம் ‘LIKE வள்ளல்’ பட்டம்!
அதற்கும் இப்போதே போட்டுவிட்டார் ஒரு LIKE!!

சில்லறை விஷயங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சில்லறை விஷயங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒருகாலத்தில் பத்துபைசாவுக்கு மூன்று பட்டர் பிஸ்கெட்டுகள்
சுடச்சுட கிடைக்கும் பேக்கரியிலிருந்து.
இன்று ஒரு ரூபாய் நாணயமே சில்லறை.
”இந்தா சில்லறைப்பணம் போகும் வழியில் யாருக்கேனும் தருவாயே”
என்று அன்போடு என்னிடம்
சில ஐம்பது ரூபாய்த் தாள்களைத் தரும்
நல்ல முதலாளி இன்றில்லை.
சில்லறையில்லையென்று பேருந்திலிருந்து
இறக்கிவிடப்பட்ட முதியவர்களில் யாரேனும்
இருபதடி வேகாத வெயிலில் நடந்து
இரண்டாக மடிந்து விழுந்து
மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும்.
கடலலையில் கால் வைத்து மகிழ்வது
சில்லறை விஷயமாயிருக்குமா?
சரியாகத் தெரியவில்லை.
சில்லறை நாணயத்தைச் சுண்டித்தான்
பூவா தலையா பார்க்கமுடியும்.
காயா பழமா வளர்ந்தவர்களுக்கு சில்லறை விஷயம்
குட்டிப்பெண்ணுக்கு உயிர்வலி.
கோயில் உண்டிகளை நிரப்புவது இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை விட
எளிய மக்கள் முடிந்துவைத்துக் கொண்டுவந்து போடும்
சில்லறைகளே.
கண் தெரியாத பாட்டியொருவர் தள்ளாடி தட்டுத்தடுமாறி
வந்துகொண்டிருந்தார்.
வாய் மட்டும் விடாமல் முனகிக்கொண்டிருந்தது.
யாராவது ஒரு ரூபாய் தர்மம் தாங்கய்யா
_ ஒரு கப்பு டீத்தன்னிக்கு ஒரு ரூபாய் குறையுதும்மா….”
சில்லறைகளை மட்டுமே சேமிக்கமுடிந்த கட்டுமானப்பணித் தொழிலாளியொருவரின் மனதில்
ஐந்துநட்சத்திர ஹோட்டலின் சில்லறையில்
உறங்கவேண்டும் என்ற
தாகம் தகித்துக்கொண்டிருக்கிறது.
ஒருவகையில் கல்லறையும்
சில்லறையே.
சௌந்தர்யலட்சுமி வங்கி விளம்பரம் சொல்லும் _
”சிறுதுளி பெருவெள்ளம்”
சில்லறையைக் களவாடினால் திருடன்;
கோடிகளை விழுங்கியவர் திருவாளர் கள்ளர்.
கதையைத் திருடுதல் சில்லறை விஷயம் சிலருக்கு
கையுங்களவுமாகப் பிடிபட்டால்
அவமானம் அவர்களுக்கா சில்லறைக்கா?
சிலருக்கு கவிதை சில்லறை விஷயம்
சிலருக்கு சகவுயிர்கள் சில்லறை விஷயம்
சில்லறை யில்லையென்றால் இந்தப் பிச்சைக்காரர்களே யிருக்க மாட்டார்கள்
என்று முகஞ்சுளித்துச் சொல்வாரும்
சில்லறையா? இவர்களெல்லாம் ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பார்கள் என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொல்வாருமாய் _
எல்லோரோடும்தான் வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது
பொல்லா இலக்கியவுலகு மட்டும் விதிவிலக்கா என்ன?

செயற்கைச் சிடுக்கு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 செயற்கைச் சிடுக்கு

‘ரிஷி’


(லதா ராமகிருஷ்ணன்)
சொல்லும் சொல்லுக்காய்
அடர்காட்டில் அனாதிகாலம்
ஆரவாரமற்று
ஒற்றைக்காலில் நின்றபடி
மோனத்தவமியற்றுபவன் சடாமுடியை
சினிமாவில் கண்ட ‘விக்’ என்று
சுலபமாகச் சொல்லி
நக்கலாய்க் கெக்கலித்துச் சிரிக்கும்
ஒலி
பெருங்காட்டின் நிசப்தப் பேரோசையிலும்
அருந்தவ ஆழ்மௌன ரீங்காரத்திலும்
வலுவிழப்பதே இயல்பாக………