LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 26, 2026

சிறுகதை - அப்பா மாதிரி - அநாமிகா

சிறுகதை (திண்ணை இணைய இதழில் - January 5, 2026 - வெளியானது)

அப்பா மாதிரி

 அநாமிகா
God Father, Father Figure என்ற சொற்பிரயோகங்களை யெல்லாம் அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள். இலக்கியப் பாடம் படிக்கும் கல்லூரி மாணவி. அந்தச் சொற்றொடர்கள் குறிப்புணர்த்துவது என்ன என்று அவளுக்குத் தெரியும். அன்பு, அக்கறை, கரிசனம், காருண்யம்… 

ஆனால், ‘அப்பா மாதிரி’ என்று யாரையாவது குறிப்பிடும்போது அவளுக்கு ஆத்திரமாக வருகிறது. அதுவும், அவள் விஷயத்தில் அவள் படிப்புக்கு உதவி செய்யும் ஓரிருவரைப் பற்றி மற்றவர்கள் அப்படிக் குறிப்பிடும்போது ஆத்திரம் பன்மடங்காகிறது….

அவளுடைய அப்பா இப்போது இல்லை. குடும்பத்துக்கு எதுவும் சேர்த்துவைக்காத செலவாளி. பொறுப்பில்லமல் சிகடெட் புகைத்து சீக்காளியாகிவிட்டவர். ப்வாங்கினால் ‘ப்ளைமௌத்’ கார் தான் வாங்கவேண்டுமென்ற கனவில் சூதாட்டத்தில் கடனாளியாகி விட்டவர்….

எல்லாம் உண்மைதான். அதற்காக, அப்பா அப்பா இல்லை என்று ஆகி விடுமா? யார்வேண்டுமானாலும் அவளுடைய அப்பாவாகிவிட முடியுமா?

“அப்பா இல்லையேன்னு கவலைப்படாதீம்மா… அம்மா, தம்பியை தங்கையைக் காப்பாற்ற் இப்பவே வேலைக்குப் போறேன்னு கிளம்பிடாதே. நீ நல்லாப் படிக்கிற பெண். மேலே படி. செலவை நான் பாத்துக்கறேன்”, என்று நிஜமான அக்கறையோடு சொன்ன உறவுக்காரர் நிஜமாகவே நல்லவர்தான். அவருடைய மனைவியும் நண்பர்களும் அவர் இவளுடைய படிப்புக்கு உதவி செய்வதை கவனமாக நாலுபேர் காதுகளுக்குக் கொண்டுபோனார்கள். 

அவர்களில் இரண்டு பேர் தவறாமல் இவளிடம், “அவர் உன் அப்பா மாதிரி’ என்று சொன்னபோது சுள்ளென்று கோபம் மூண்டது. உடனே இன்னொருவர், “ஆதாவது, உன் மீதான அவருடைய அக்கறையில் என்று சொல்கிறோம். உன் அப்பா மாதிரி சூதாடுவார், சிகரெட் குடிப்பார் என்று நினைச்சுக்கிடப் போறே” என்று தெளிவாக்குவதாய் நக்கலாய் புன்முறுவலித்துக் கொண்டே கூற மற்றவர் பெரிதாகச் சிரித்தார். 

’என் அப்பா மாதிரி சூதாடலை, சீட்டாடலைன்னா, ஒருவேளை என் அப்பா மாதிரி சீக்காளியோ என்று நறுக்கென்று கேட்கத் துடித்தது. அதிகப்பிரசங்கி என்ற பெயர் வரும். அம்மாவின் வளர்ப்பைக் குற்றம் சொல்வார்கள்… ‘ தன் அப்பாவை அவர்கள் கேலி செய்வது தனக்குப் பிடிக்கவில்லை என்று உணர்த்தும் இறுக்கமான முகபாவத்தை மறுபக்கமாய் திருப்பி மறைக்க முயன்று அங்கிருந்து அகன்றாள். 

அப்பா ஸைமன் டெம்ப்ளர் கதையும், ஹவுண்ட் ஆஃப் தி பாஸ்கர்வலீஸ் கதையும் சொன்னால் அலுக்காமல் கேட்டுக்கொண்டிருக்கத் தோன்றும். அப்பாவுக்கு உலகத்தி லுள்ள அத்தனை வகை நாய்களின் பெயர்களும், அவை அதிகமாக இருக்கும் நாடுகளின் பெயர்களும் தெரியும். 

ஒரு முறை அப்போதைய பாண்டிச்சேரிக்குச் சென்றபோது அங்கிருந்த அயல்நாட்டுப் பெண்ணிடம் ஆங்கிலத்தை அவர்கள் உச்சரிப்பிலேயே அப்பா பேசி கைகுலுக்கியபோது அவளுக்கு அத்தனை பெருமையாக இருந்தது! 

சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டு அண்ணாந்தபடி வளையம் வளையமாகப் புகைவிடுவதை அவளும் அவளுடைய தங்கையும் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்!. 

காசு செலவில்லாத கடற்கரைக்குக் கூட்டிச்செல்லும் அப்பா கடலைப் பற்றி, அலைகளைப் பற்றி, வானத்தைப் பற்றி, அங்குள்ள கிரகங்கள், நட்சத்திரங்களைப் பற்றியெல்லாம் எவ்வளவோ விவரங்களை சுவாரசியமாக கதைபோல் சொல்லுவார். கிளிஞ்சல்களைக் கையிலெடுத்து அவற்றின் வகைகள் பற்றி, பயன்கள் பற்றி, சங்குகள், முத்துகள், மீன்கள் பற்றியெல்லாம் அள்ள அள்ளக் குறையாச் செல்வமாய் தகவல்களைத் தருவார்……சற்று பெரியவளாக வளர்ந்த பின், சமூகம் குறித்து நிறைய செய்திகள் மனங் கொள்ளுமாறு சொல்வார்.  

அட, இதெல்லாம் இல்லாமலேபோனாலும், அப்பா அப்பாதானே…..அன்பு என்பதை அளக்குங்கோலாக பணம் எப்படியாகும்? அதுவும், அப்பா என்னும்போது…. 

அவளுக்குப் படிக்கக்கிடைத்த ஜப்பானிய எழுத்தாளர் யாஸுநாரி காவாபாட்டாவின் கையடக்கக் கதைகளில் ஒன்றில் காதல்வயப்பட்டிருக்கும் இளைஞனிடம் அவனுடைய தாயார் கூறுவாள் – “நானும் காதலித்தேன். ஆனால், உன் தந்தையைக் கல்யாணம் செய்துகொள்ளும்படியாகியது. நீயாவது உனக்குப் பிடித்தவளைத் திருமணம் செய்துகொள்”. அந்தத் தகவலில் ஏதோவொரு விதத்தில் தன் பிறப்பு சம்பந்தப்பட் டிருப்பதாகக் கருதும் அந்த இளைஞன் தன் தாயைப் போலவே தானும் அறிமுக மில்லாத ஒருத்தியை மணந்துகொள்ள முடிவுசெய்வான். அந்தக் கதையில் புலனாகும் மனித மன நுண்ணுணர்வுகள் அவளை அயரவைத்தது. 

கல்லூரிப் படிப்புக்குத் தடங்கலில்லாமல் ஆன்லைன் வேலை ஒன்று தேடிக் கொண்டாள். தங்கைக்கு ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனம் மூலம் படிப்புக்கு உதவித்தொகை கிடைக்க வழியேற்பட்டது. 

கூடப் படித்த தோழியொருத்தியின் உறவினப் பெண்மணி யொருவர் அயல்நாட்டில் இருப்பதாகவும், இவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டால் காலி செய்யாமல் தொந்தரவுக்காளாக நேரிடலாம் என்ற அச்சம் காரணமாக பூட்டியே வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டு எப்போது கேட்டாலும் காலிசெய்து கொடுத்துவிடுவதாக உறுதியளித்து குறைந்த வாடகைக்கு அந்த வீட்டில் தான், தன்னுடைய தாய், தங்கையோடு குடியேறினாள்.  

சமாளிக்க முடியும் என்ற தெம்பு ஏற்பட்டதும் படிப்புக்கு உதவிக் கொண்டிருந்த உறவினர் வீட்டுக்குப் போய் அந்த ஆறுவருடங்கள்  உதவியதற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து ’இனி உதவ வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாள். 

அந்த மனிதரும் அவருடைய மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார் கள். அந்தப் பெண்மணியின் முகத்தில் கொஞ்சம் இளக்காரமும் நிறைய நிம்மதியும். 

அங்கு வந்து அவர்களோடு உரையாடியவாறே காபி குடித்துக்கொண்டிருந்த இன் னொரு மனிதர் “இப்பத்தானே ஆன்லைன் வேலைக்குச் சேர்ந்திருக்கே. அதுக்குள்ளே இப்படிச் சொல்றே? இப்பல்லாம் இந்த மாதிரி உதவி செய்வதற்கு யார் முன்வராங்க? இவர் உன் அப்பா மாதிரி….அதாவது – “

அவர் முடிக்குமுன் குறுக்கிட்டவள் நிதானமாகக் கூறினாள் _”அதாவது, அன்பில், அக்கறையில்  – குடிக்கிறதில், காசைக் கரியாக்குவதில் இல்லே – அப்படித்தானே ஸார்? ஆனால், குடிச்சாலும், காசைக் கரியாக்கினாலும் அப்பா அப்பாதானே – அவருக்கு எங்கள் மீது அன்பில்லை, அக்கறை இல்லைன்னு ஆகிடுமா என்ன?”

அந்த மனிதர் முகம் சிவந்தது. “”இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. உன் அப்பா அன்பா, அக்கறையா இருந்தா உங்களையெல்லாம் இப்படி தம்பிடி இல்லாம தெருவிலே விட்டிருப்பாரா? பெரிசா பேசறே? அப்பா மாதிரி அக்கறை காட்டறவருக்குக் காட்டும் நன்றி இதுதானா?””

 ”மன்னிக்கணும் ஸார். அந்த உதவிக்கான நன்றி மனசெல்லாம் நிறைஞ்சிருக்கு. என்றைக்கும் இருக்கும். ஆனால், உதவறவங்க எல்லாம் அப்பா ஆகிவிட முடியாது. இதோ. நீங்க ஸாரோட மனைவி கொண்டுவந்து கொடுத்த காபியைக் குடிச்சிட்டு இருக்கீங்க. அவங்க அன்பா, அக்கறையா கொண்டுவந்து கொடுத்ததாலே அவங்களை ‘உங்க மனைவி மாதிரி’ன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?”

அந்த மூன்று முகங்களும் அதிர்ச்சியில் வெளிற, அவள் விறுவிறுவென்று அங்கி ருந்து வெளியேறினாள்.

***

சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும் - சிறுகதை - அநாமிகா

 சிறுகதை ( * திண்ணை - December 22, 2025 - இணைய இதழில் வெளியானது)

சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும்

  • அநாமிகா

கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் வந்ததுமே பரமேஸ்வரியம்மாவின் கண்கள் சனீஸ்வரர் சன்னதியின் பக்கவாட்டில் இருந்த நீண்டாகின்ற மண்டபப் படிக்கட்டுகளைப் பார்த்தன வழக்கமாக இந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருக்கும் சாந்தமாவைக் காண வில்லை. போன சனிக்கிழமையும் வரவில்லை

 ’என்னவாயிற்று?’ என்று மனதிற்குள் கவலையோடு கேட்டுக்கொண்டார் பரமேஸ் வரியம்மா. முகம் அனிச்சையாக சனீஸ்வரர் சன்னதிக்கு வலப்புறம் இருந்த அம்பிகையின் சன்னிதானத்தை நோக்கித் திரும்பியது. கண்களை மூடி, கைகளைக் கூப்பி ஒரு கணம் சாந்தமாவுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டார். தனக்காகவும். பின், பிரகாரத்தைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தார். ஆங்காங்கே இருக்கும் பிள்ளையார் சன்னதி, முருகன் சன்னதி, சிவன் சன்னதி என்று நின்று நின்று பிரார்த்தித்துக் கொண்டார். கையில் இருந்த சில்லறைகளை கற்பூரத் தட்டுகளில் போட்டார். ’ராம ராம ராம, கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண, சிவ சிவ  சிவ -கடவுளே இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும் நோய் நொடி எதுவும் இல்லாமல் நல்லா இருக்கணுமே, உலகத்தில் வறுமை போர் பஞ்சம் வன்முறை எதுவுமில்லாமல் எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாய் இருக்கணுமே’ என்று எப்போதும்போல் மனம் ஒன்றி வாய் முணுமுணுக்க பெரிய சன்னதியில் விபூதி வாங்கிக்கொண்ட பின் மீண்டும் சனீஸ்வரர் சன்னதி பக்கம் வந்தபோதும் கண்கள்  அனிச்சைச்செயலாக அந்தப் படிக்கட்டுகளைப் பார்த்தன. சாந்தம்மாவை  அங்கே காணவில்லை.

 ’ஒருவேளை உறவுக்காரர் வீட்டுத் திருமணம் எதற்காவது போயிருப்பார் எதற்காவது போயிருப்பார்…. இன்று முகூர்த்த நாள் ஆயிற்றே…’ என்று எண்ணிக்கொண்டார் பரமேஸ்வரியம்மா. ஆனால், கொஞ்ச நாட்களாகவே சாந்தம்மாவைக் கோவிலில் பார்க்க முடியவில்லை. ‘உடம்புக்கு எதுவுமில்லாம இருக்கணும்’ என்று கவலையோடு எண்ணிக் கொண்டார்

கோவிலுக்கு வருவோர் பலவிதம். பக்தியோடு வருபவர்கள்; பராக்கு பார்க்க வருபவர்கள்; கண்ணீர் மல்க கடவுளை தரிசிப்பவர்கள்; கடவுள் சன்னதியிலும் தன்னை முன்னிலைப்படுத்தி ’பந்தா’ காட்டுபவர்கள்’ கண்ணை மூடி ஒரு கணம் பிரார்த்தித்து விட்டு பத்தோடு பதினொன்றாவது பக்தராக ஆரவாரமின்றி அடுத்த சன்னதிக்கு நகர் பவர்கள், கடவுளுக்கும் மற்ற பக்தர்களுக்கும் நடுவே தொடர்பு ஏற்படுத்தும் இடைத்தரகராய் தம்மை பாவித்துக்கொண்டு தடால் புடால் என்று நடந்து கொள்கிறவர்கள்; இந்தக் கோவிலில் கதாநாயகியை யார் கொல்ல சதி திட்டம் தீட்டுவதாய் காட்சியமைக்கலாம் என்ற கலாபூர்வமாக சிந்திப்பதற்காக வருகை தந்து அங்கேயிங்கே காமராக்கூர் கண்களால் கவனித்தபடி கோவில் கடையில் வடை, அதிரசம் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ’மெகாசீரியல்’வாதிகள்; ஒரு மெகா சீரியலில் இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் கோவிலுக்கு வரும் கதாநாயகியை அவள் பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது மயக்க மருந்து தெளித்த கைகுட்டையால் முகத்தில் அழுத்தி அங்கு இருக்கும் சாக்குமூட்டையில் திணித்துக் கடத்திக்கொண்டுபோனால் அடுத்த வாரம் இன்னொரு மெகா சீரியலில் அதே கோவிலில் வில்லன் ஊர் தர்மகர்த்தாவை அந்தக் கோயிலில் அரிவாளால் வெட்டித்தள்ளுவார். ’மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களை இந்த மெகா சீரியல்வாதிகள் இப்படியெல்லாம் பயன்படுத்தாமல் இருப்பது மெச்சத் தகுந்ததா? அச்சம் காரணமாகவா?’ என்றெல்லாம் நாற்சந்தி செய்திச் சேனலில் எந்த மக்கள் முறையீட்டு மாமன்றமும் நடப்பதில்லை செய்திச் சேனலோ, என்டர்டெயின்மென்ட் சேனலோ – தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பான அலசல் விமர்சன நிகழ்வுகளையெல்லாம் வெகு கவனமாக தவிர்த்துவிடுவதுதானே நடப்பு ண்மையாக இருக்கிறது… 

 _ இளங் காதலர்கள் மரநிழல் அடர்ந்த மூலையாக பார்த்து அமர்ந்துகொள்வார்கள். அவர்களை வேடிக்கை பார்ப்பதே, வேவு பார்ப்பதே வேலையய சிலர் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவார்கள். கொஞ்சம் அத்துமீறினாலும் விரட்டியடிக்கத் தயாராய் பார்த்துக் கொண்டிருப்பார் கோயில் பாதுகாவலர். கண்ணில் நீர் கசிய நின்றுகொண்டிருப்பவர்கள் உண்டு; ’தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை’ என்பதாய் ”கோவில் சிற்பங்களை பார்க்க வந்தேன்” என்ற அக்கம்பக்கம் இருப்பவர்கள் காதுகளில் விழும்படியாக உரக்கச் செல்பவர்கள் உண்டு. ’அவனின்றி அணுவும் அசையாது’, என்று மனமார நம்புகிறவர்கள் உண்டு. நிற்க நிழல் வேண்டுமென்று முறையிட்டுத் தொழுபவர்கள், நாலாவது சொந்த வீடு வாங்க வழி செய்ய வேண்டும் என்று அர்ச்சனை செய்பவர்கள், நோய் குணமாக வேண்டும் என்று மனம் உருக தொழுதேத்துவோர், என் எதிரி நோய் நொடியில் நொடித்துப் போக வேண்டும் என்று முகம் சிவக்க மனதிற்குள் சங்கல்பம் செய்வதாய் வேண்டிக் கொள்வோர்….

சமயங்களில் ’பாவம் சாமி’ என்று பரிதாபம் தோன்றும் பரமேஸ்வரியம்மாவுக்கு. தன்னைப் போன்ற, சாந்தம்மாவைப் போன்ற அதிக நிதி வசதி, உடல் வலு இல்லாத பலருக்கு கோவில் ஒரு கடற்கரை போல். காலாற நடந்துபோகலாம் அலையெனத் திரண்டிருக்கும் சக மனிதர்களைக் கண்ணாரக் கண்டுகளிக்கலாம். சிலரிடம் குசலம் விசாரிக்கலாம். சிலரிடம் நட்பு பாராட்டலாம். சிலரோடு அவரவர் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளலாம்….

ப்படிப் பழக்கமானவர்கள்தான் சாந்தம்மாவும் பரமேஸ்வரியம்மாவும். ஒரு நாள் ”அம்பாளுக்கு அலங்காரம் எவ்வளவு நல்லா இருக்குல்ல!” என்று முகம் மலரக் கூறிக் கொண்டே கையில் இரண்டு தொண்ணைகள் நிறைய சர்க்கரைப் பொங்கலோடு வந்து ஒன்றை சாந்தமாவிடம் நீட்டினார் பரமேஸ்வரியம்மா. “ஏதோ யோசனைல உட்கார்ந்து இருந்தீங்க. அதான் பிரசாதம் வாங்க மறந்துடுவீங்களோனு உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்தேன்”, என்று கனிவாகக் சிரித்தபடியே கூறிய பரமேஸ்வரியம்மாவை ஏறெடுத்துப் பார்த்தார் சாந்தம்மா. “நன்றிங்க. சில சமயம் க்யூ இருக்கும். நிறைய நேரம் நிற்க முடியாது. அதான் வாங்காம விட்டுடுவேன். அதோ, அந்தச் சின்னப் பொண்ணு வாங்கிட்டு போகுதே – அம்மா அப்பா இல்லை. வீட்டில் அண்ணா – அண்ணிதான். அண்ணி சரியா சோறு போட மாட்டாங்களாம்…. வளர்ற வயசு. அன்னைக்கு அழுதுட்டு சொன்னப்ப அப்படியே அடிவயிறு கலங்கிடுத்து. என் கையில் இருந்த பிரசாதத்தை அப்படியே கொடுத்துட்டேன்….”

அருகே அமர்ந்து கொண்ட பரமேஸ்வரியம்மா “ஏதோ, நமக்கு மூணு வேலையும் சாப்பிட வழி வைத்திருக்கிறார் ஆண்டவன். அவர் போயிட்டாரு… ஏதோ பென்ஷன் வருது அதுக்கு நன்றி சொல்ல தான் கோவிலுக்கு வரேங்க. அது வேணும், இது வேணும்னு கேக்கறதுக்கில்லே…  கோவிலுக்கு நடந்து வர்ற அளவுக்கு நோய் நொடி இல்லாம  இருந்தா – அஹ்டுவே போதும்…”

”என் கதையும் இதே தாங்க!  நானும் அதேதாங்க வேண்டிப்பேன்!” என்று கனிவாகக் கூறிப் புன்முறுவலித்தார் சாந்தம்மா. 

அப்படி ஆரம்பமான பழக்கம். மெதுமெதுவாய் அவரவர் குடும்பம் பற்றிய விசாரிப்புகள். 

”பையனுக்கு இப்பதாங்க கல்யாணம் ஆச்சு…”

 ”மருமக பாசமா இருக்காளா?”

”திடீர்னு ஒரு ஒட்டு உறவு வரணும்னு நாம எதிர்பார்க்க முடியாதில்லே…” என்று தர்க்கபூர்வமாகக் கேட்ட சாந்தம்மா சற்றே வருத்தமாகச் சிரித்தார். சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தனர். பின், “வந்ததுமே நான் அதுநாள் வரை சமைச்சுக்கிட்டு இருந்த பாத்திரம் பண்டம் எல்லாத்தையும்ம் எடுத்து பரண்மேல போட்டுட்டா… தன்னோட பாத்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சா… அவ வீடுன்னு பந்தம் உண்டாக்கிக்கறது நல்லதுதானேன்னு அறிவு சொன்னாலும் ’அப்ப, இவ்வளவு தான் நான் சாக்கடையிலயா சமைச்சிகிட்டு இருந்தேன்னு மனசுல ஒரு வேதனை குத்திக்கிட்டே யிருக்கு…” சாந்தம்மா தொண்டையடைக்கச் சொன்னார். கேட்க வருத்தமாக இருந்தது பரமேசுவரியம்மாவுக்கு.

”விடுங்க… அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா இருக்காங்க இல்ல?”

”ஆ! அதுதான் நம்மால எதுவும் சண்டை வந்துடக்கூடாது என்று பார்த்து பார்த்து நடந்துக்கறேன்… ஆனாலும், சமயத்தில ’இங்க நம்ம யாரு?’ங்கற கேள்வி என்ன குடையுது,  பயமுறுத்துது….”

 இன்னொரு நாள் _ “இப்ப எல்லாம் மருமக கழுத்துல தாலியே இல்லை. அன்னைக்கு வந்திருந்த அவ சினேகிதி கேட்டதுக்கு ’ஆம்பளைக்கு என்ன அந்த மாதிரி அடையாளமா இருக்குது?’ன்னு கேட்டு பெரிசாச் சிரிச்சா. ’உன் மாமியார் எதுவும் சொல்ல மாட்டாங்களா’ன்னு சினேகிதிக்காரி கேட்டதுக்கு ’எங்க மாமியார் ரொம்ப நல்லவங்க. இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்கன்னு அவளாவே சொல்றா… நான் எதுவும் சொல்றது இல்ல…” _  பரமேஸ்வரியம்மாவின் பக்கத்தில் அமர்ந்துகொண்ட பின் சற்று நேரத்தில் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல் சாந்தம்மா சன்னக்குரலில் கூறியதை கேட்டு பரமேஸ்வரியம்மாவுக்கு வருத்தமாயிருந்தது.

 பரமேஸ்வரி அம்மாவுக்கு இரண்டு பேரப்பிள்ளைகள் என்று விசாரித்து அறிந்து கொண்டதும் முகம் மலர்ந்தது சாந்தம்மாவுக்கு! “பேரப்பிள்ளைகள் பாசமா இருப்பாங்களா? ஒரு நாள் கோயிலுக்கு கூட்டிட்டு வாங்களேன்.”

பரமேஸ்வரியம்மா வருத்தங்களைக் கடந்த ஞானியாகச் சிரித்தார். “மகன் அமெரிக்காவில் இருக்கான். வாரம் ஒருநாள் வீடியோ கால் போட்டுப் பேசுவான். மருமகள் தலையை நீட்டி ’சாப்பிட்டாச்சா அம்மா’ என்று சம்பிரதாயமாகக் கேட்பாள். இரண்டு பேரப் பிள்ளைகள் எப்பவாவது ஒரு தடவை எட்டிப் பார்த்து “ஹலோ கிரான்மா!” என்று சொல்வார்கள். இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை இந்தியா வருவாங்க. அப்பக் கூட பெரும்பாலும் ஹோட்டலில் தான் தங்குவாங்க. என் வீடு சௌகரியம் இல்லையாம்…. பேரப்பசங்க நம்மகிட்ட ஒட்டிக்க கூடாதுங்கறதிலே மருமக ரொம்ப கவனமா இருப்பா…”

 ”ஏன்?”

”ஏன்னா? அப்படித்தான்! நான் எதையும் கண்டுகொள்வதில்லை”, என்று பரமேஸ்வரியம்மா சொன்னபோது அதில் மறைந்திருந்த ஆதங்கத்தை சாந்தம்மாவால் உணர முடிந்தது

”அப்ப, இங்க யாரு கூட இருக்கீங்க?”

”தனியாத்தான் இருக்கேன். துணைக்கு ஒரு பெண் இருக்கா. அவளுக்கு என் பென்ஷன் ல இருந்துதான் மாசச் சம்பளம் கொடுக்கிறேன்….”

ன்று ஏதேதோ நினைத்தவாறு வழக்கத்தை விட அதிக நேரம் கோயிலில் இருந்து விட்டோம். பாவம் வீட்டில் வேலை செய்யும் அந்தப் பெண் அம்மு கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள்’ என்ற உணர்வோடு அவசர அவசரமாக எழுந்ததில் பரமேஸ்வரி யம்மாவின் முழங்கால்களும் இடுப்பும் ’சுள்’ளென்று வலித்தன. கோவிலை விட்டு வெளியேறி, அங்கே ஓரமாகக் கிடந்த செருப்பை அணிந்துகொள்ளும் முன் உள்ளே நேராகத் தெரிந்த பிள்ளையாரை மீண்டும் ஒரு முறை பார்த்து கண்களை மூடித் தொழுத கணம் மனம் தன்னிச்சையாக சாந்தம்மாவின் நலனுக்கும் பிரார்த்தித்துக்கொண்டது.

***

கலந்துரையாடலும் கலந்துறவாடலும் - சிறுகதை - அநாமிகா

சிறுகதை (திண்ணை இணைய இதழில் வெளியானது)

லந்துரையாடலும் கலந்துறவாடலும்

  • அநாமிகா

14 டிசம்பர் 2025

முதல் பார்வையில் அந்த நடுத்தர வயது பெண் யார் என்று தெரியவில்லை எனவே எந்த விதமான பரிச்சய பாவமும் வெளிப்படாமல் என் பார்வை அவளை விட்டு அகன்றது. ஆனால், ஏதோ உள்ளுணர்வில் மறுபடியும் பார்த்தபொழுது அவள் என் ஒன்றுவிட்ட அக்கா என்பதை அடையாளங்காண முடிந்தது. 20 வருட இடைவெளி. இன்று இறந்திருக்கும் எங்கள் பெரியப்பா ஒரு காலத்தில் அவளையும் அவளுடைய தம்பியையும் தன்னுடைய குழந்தைகளாக பாவித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்து பேரானந்தம் அடைந்தவர்.

 ”ஸாரி வத்ஸலா, முதல்ல பார்த்தப்ப அடையாளம் தெரியல”, என்று கூறினேன். சாவு வீட்டுக்கு வந்திருப்பவர்களிடம் ’நீ நல்லா இருக்கியா’ என்று கேட்பது நன்றாக இருக்காது என்பதால் கேட்காமல் நிறுத்திக்கொண்டேன்.

 இலேசாகப் புன்முறுவலித்தபடியே கேட்டாள்: “சங்கர் வைஃப் நல்லாயிருக்காளா? அவளைப் பார்த்து நாளாச்சு”.

 ’அவளை மட்டுமா…… கல்யாணத்திற்கும் சாவுக்கும் தான் வருகை தருவது, சந்திப்பது என்று ஆகி பல நாட்களாகிவிட்டது. கல்யாணத்துக்கு கூட வராமலிருந்துவிடலாம் ஆனால், சாவுக்கு துக்கம் விசாரிக்க போகாமல் இருக்கவே கூடாது என்று வியாக்கியானம் செய்வார்கள்….

வருடக்கணக்கில் பார்த்துக் கொள்ளாதவர்கள், ஃபோனில் கூட பேசிக்கொள்ளாதவர் களுக்கு அப்படி என்ன துக்கமும் இழப்புணர்வும் ஒரு சாவில் ஏற்பட்டு விடப்போகிறது…? ஒரு சாவின் போது மட்டுமே நினைவோடையில் பின்னோக்கிச் சென்று நினைவுகூர்தல், நெகிழ்வடைதல் என்பது என்ன விதமான உறவு, பாசம், நேசம்….?

நிறைய பேருக்கு கல்யாண மண்டபமோ, இழவு வீடோ – எல்லாமே வம்புமடங்கள்.  ‘அந்த அயனாவரம் வீட்டை யார் பேருக்கு எழுதிவச்சிருக்கானாம்? இல்லை, எந்த தர்மகாரியத்துக்காவது தானம் செஞ்சுட்டானா?’ என்று இறந்தவரைப் பற்றி விமர்சித்துக்கொண்டிருப்பார்கள். ’எங்கப்பா செத்தப்போ ஆயிரம் பேருக்குக் குறையாம வந்தாங்க’ என்று ஜம்பமடித்துக்கொண்டிருப்பார்கள். அப்படியே யாராவது செத்துப்போனவரை எண்ணி நிஜமாகவே வருந்தி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தால் . பிறந்தவங்க எல்லோரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்” என்று தத்துவ பேசுவார்கள்..

இப்போது ஆஜராகியிருக்கும் இவர்களையெல்லாம் பார்க்கவேண்டும் என்று இதோ இங்கே விழி மூடாமல் இறந்துகிடப்பவர் எத்தனை ஏங்கியிருந்திருப்பார்… இவர்கள் இப்போது தன்னை பார்க்க வந்திருப்பது இறந்தவருக்கு தெரியுமா… ‘வாராது போல வந்த மாமணியைப் பார்ப்பது போல் தன்னை பார்க்க வந்திருப்பவர்களை ஆசை தீரப் பார்ப்பது போல் இறந்தவரின் கண்கள் விரியத் திறந்திருந்தன. கண்கள் வழியாக உயிர் பிரிந்திருக்கிறது என்று சிலர் சொல்லிக் கொண்டார்கள். யாரும் அந்த அசைவற்ற கண்களை மூடிவைக்க முற்படவில்லை

சங்கரின் மனைவியினுடைய நலன் விசாரிப்பதற்குக் காரணம்  தெரிந்ததுதான். சங்கருக்கும் அவனுடைய மனைவிக்கும் விவாகரத்து நடந்துவிட்டது. இவர்களுக்கு தெரியாமலிருக்க வழியே இல்லை. உறுதிப்படுத்திக்கொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம். பின், அதைப் பற்றி அக்கு வேறு ஆணிவேராக ஆளாளுக்கு தோன்றியபடி அலசித்தீர்ப்பார்கள்.

வத்ஸலாவின் காதலுக்கு அவளுடைய பெற்றோர்களின் ஆரம்ப கால தீவிர எதிர்ப்பும் (அவள் மட்டும் அவனை கல்யாணம் செய்துகொண்டால் நாங்கள் தற்கொலை செய்துகொள்வோம்), பின், அரை மனதோடு அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்ததும் (அந்த மாம்பல ஜோசியர் கிட்ட போனோம். ‘கண்டிப்பா கல்யாண வேற ஜாதிக்காரனுடன்தான் நடக்கும், ஆனா, இரண்டு பேரும் அமோகமா வாழ்வாங்கன்னு சொன்னார்) நினைவுக்கு வந்தது.

“சங்கருக்கு போன வருஷமே டிவோர்ஸ் ஆயிடுத்தே” – வேண்டுமென்றேதான் சொன்னேன். வாயில் போட்டு மெல்லுவதற்கு ஏதாவது கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏதோ என்னால் ஆனது…. அந்த விஷயம் அவர்களுக்கு ஏற்கனவே பல வழிகளில் கிடைத்திருக்கும் நம்மிடமிருந்து அதை உறுதிப்படுத்திக் கொள்ளவே  கேட்கிறார்கள். அது கல்யாண வீடாக இருந்தாலென்ன, இழவு வீடாக இருந்தாலென்ன… வெறும் வாய்களுக்கு மெல்லுவதற்கு எப்போதும் வேண்டும் – உமியாவது…

அதற்குப் பின், சங்கரும் அவனுடைய குடும்பமும் வந்தபோது, மிகவும் வாத்யல்யத்தோடு வத்ஸலாவும் அவளுடைய பெற்றோர்களும் அவனை எதிர்கொண்டழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார்கள்.  ’ஆடு நனைகிறதே என்று அழுகிறதாம் ஓநாய்’, ’முதலைக்கண்ணீர்’ என்று வழக்கமாகப் பயப்படுத்தப்படும் உவமான உவமேயங்களெல்லாம் தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தன.

உளவியலுக்குப் படித்து ஆன்லைனில் உளவியல் ஆலோசனைகள் வழங்குவதாக வத்ஸலா தெரிவித்தபோது ‘அப்படித்தான் விஷயத்தைப் போட்டு வாங்கணும்’ என்று ஏதோ ஒரு தருணத்தில் வெற்றிப்பூரிப்பில் ஏதோ வம்பு கிடைத்த விஷயத்தைச் சொன்ன அவள் முகம் பளபளத்து ஒளிர்ந்ததும் நினைவுக்கு வந்தது.

இறந்துகிடந்தவரைப் பார்த்து அவர்கள் அழுததெல்லாம் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு இறப்பிலும் மற்றவர்கள் தங்கள் இறப்பைப் பார்க்கிறார்கள் என்று எப்போதோ படித்ததுண்டு. SHE IS GOOD BEING GONE என்று ஷேக்ஸ்பியரின் ஆண்டனி தனது மனைவி ஃபுல்வியாவின் இறப்பு குறித்துச் சொல்லும் முத்திரை வாசகம் நினைவுக்கு வந்தது

***

அடுத்த சந்திப்பில் ஷங்கரின் அம்மாவாகிய என்னுடைய இன்னொரு உறவுக்காரரை பார்த்தபொழுது அவள் வத்ஸலாவை வசைபாடித் தீர்த்தாள். “அந்த 13 நாட்களும் சங்கர் பக்கத்திலேயே உட்கார்ந்து அவனுடைய விவாகரத்து பற்றியே துருவித் துருவி கேட்டுக் கொண்டிருந்தார்கள் வத்ஸலாவும் அவள் புருஷனும்” என்று வெடித்தாள்.

”நாம உறவுக்காரங்களே கொஞ்சம் பேரு தான் – இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா இருக்கியா என்று கேட்டுக்கொள்ளக்கூட போன்ல தொடர்பு கொள்றதில்லன்னா எப்படி” என்பான் சங்கர். ஆனால், அவனாக உறவுக்காரர்கள் யாருக்கும் போன் போட்டு பேசியதில்லை. எப்போதாவது அவர்கள் வீட்டுக்கு போயிருந்த தருணங்களிலும் ’ஆன்லைன் வேலை’ என்று அவனுடைய அறைக்குள் போய் தாழிட்டுக்கொண்டு விடுவான். அவன் மறந்தாலும் ”உனக்கு நிறைய வேலை இருக்கு போடா” என்று அவனுடைய அம்மா நினைவுபடுத்தி அனுப்பிவிடுவாள்.

சங்கரின் அம்மா ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டேயிருந்தாள். “துருவித் துருவி வம்பு கேட்டார்கள் வத்ஸலாவும் அவளுடைய வீட்டுக்காரரும். அவளுடைய பிரெஞ்சு அண்ணி அவ்வளவு நல்லவளாம் – அதை நடுநடுவுல சொல்லிக்கொண்டேயிருந்தாள் மாமியாரை, அதாவது, வத்ஸலாவின் அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாளாம். நூறு முறை அதையே சொல்லி சொல்லி பெருமையடித்துக்கொண்டார்கள் பிள்ளையும் மருமகளும் இருப்பது பாரீசில். இவர்கள் இருப்பது இங்கே. வருடத்திற்கு ஒரு முறையோ ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ 21 நாட்கள் இந்தியா வந்து தமிழகத்தில் ஊர் பக்கம் எட்டிப் பார்த்து, ’ஃபேமிலி ட்ரீ’ துளிர்த்துத் தழைக்க இரண்டு வாளி அந்நிய நாட்டுப் பண்டங்களை கொட்டி முடித்து ’வெரி ஹாட் ஹியர்’ என்று மகனும் அதையே ப்ரெஞ்ச்சில் மருமகளும் சொல்லிவிட்டு ஊர்சுற்றிப் பார்க்க ஏஸி காரில் போய்விடுவார்கள். மாமல்லபுரம் மெரினா பீச், கபாலீஸ்வரர் கோவில் என்று ஊர் சுற்றி முடித்து பின் பயணத்திற்காக மூட்டை முடிச்சுகளை கட்டும் போது கூட மாமியார் மருமகள் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டால் சம்பிரதாயப் புன்முறுவலோடு சரி இதில் எதிர்த்து பேசுவதற்கோ மறுத்துப் பேசுவதற்கோ என்ன வழி….?”

 _ அந்தக் கல்யாணம் நடந்தபோது சங்கரின் அம்மாவும் அப்பாவும் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது நினைவுக்கு வந்தது. குடும்பம் கப்பலேறி விட்டதாக அப்படி அங்கலாய்த்தார்கள். அந்த கல்யாணத்திற்கு அழைப்பதற்காக வத்ஸலாவும் அவளுடைய தாயும் தந்தையும், அதாவது சங்கருடைய அம்மாவின் தம்பியும் தம்பி மனைவியும் போனபோது முகத்தை திருப்பிக் கொண்டார்கள்……



CONDITIONAL கருணையாளர்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 CONDITIONAL கருணையாளர்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
புறாவுக்காக தானியங்களைத் தனது கவிதை வரிகளெங்கும் தூவிவைப்பார்
சிற்றெறும்புக்கு சுவைக்கக் கற்கண்டு கிடைக்கவில் லையே
என்று கண்ணீர் உகுத்தவாறே
வீட்டிலிருக்கும் சர்க்கரை புட்டியின் அடியிலிருந்து
சுரண்டியெடுத்துப் போடுவார்
மதிய தேனீருக்கு இல்லையென்றால்
பரவாயில்லை என்றவாறே
வீதியோரம் அடிபட்டுக்கிடக்கும்
பூனைக்குட்டியைத்
தனது கவிதையின் சஞ்சீவி மூலிகைகளால் குணப்படுத்தி
கைகளில் எடுத்துக் கொஞ்சுவார்
சுவாசிக்கவும் மறந்து வாசிக்க வாசிக்க
நேசம் பெருக்கெடுக்கும்.....
ஆனால் தேசம் என்றால் மட்டும்
மோசக்காரா என்பார்.
ஊரையெல்லாம் நாசம் செய்வோரை
ஏசினால்
பேசாதே என்று சங்கியாக்கி சனாதனியாக்கி
மங்க்கியாக்கி
மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
சமத்துவவாதியாய்
தன்னார்வல BOUNCER ஆக, BODYGUARD ஆகக்
காவல் காத்துக்கொண்டிருப்பார் என்னாளும்
‘SOME ARE MORE (MUCH MORE) EQUAL’
சிம்மாசனவாதிகளை

மாற்றுக்கருத்தாளர்கள் இங்கே மிகக் கொடிய ஃபாஸிஸ்ட்டுகள்!

 மாற்றுக்கருத்தாளர்கள் இங்கே மிகக் கொடிய ஃபாஸிஸ்ட்டுகள்!


..................................................................................................................................

எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் கதையொன்றில் பிரதான கதாபாத்திரம் மனநோய் மருத்துவரிடம் போயிருப்பார். மருத்துவர் கேள்விகள் கேட்கக் கேட்க பதிலளிக்கும் கதாநாயகன் நடுநடுவே ‘ரிலாக்ஸேஷன்’ என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துவார். அவர் முன்வைக்கும் கருத்துக்கும் அந்த வார்த்தைக்கும் சம்பந்தமிருக்காது. புரியாமல் குழம்பியவராய் மருத்துவர் அது குறித்துக் கேட்கும்போது ‘ஏன் டாக்டர், நடுநடுவே இந்த வார்த்தையை சும்மா சொல்லலாம்னுதான்’ என்பதாகவோ என்னவோ ஒரு பதிலைச் சொல்வார். நகைச்சுவைத் தொனியில் எழுதப்பட்ட கதையென்றாலும் அதன் உள்ளர்த்தம் அத்தனை நகைச்சுவையானதல்ல. அது சமூகத்தின் மீது, சில மேம்போக்கு ஆசாமிகள் மீதான விமர்சனம்.
இப்போது ஆளாளுக்கு எதிர்க்கருத்தாளரை ‘ஃபாஸிஸ்ட்’ என்று அடைமொழியிட்டு வசைபாடுவதைப் பார்க்கும்போது இந்தக் கதை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

மரியா மாண்டிஸோரி

 மரியா மாண்டிஸோரி



சர்வதேச மகளிர் தினத்தன்று எத்தனை பேர் மரியா மாண்டி ஸோரியை நினைவுகூர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாளும் நினைக்கப்படவேண்டியவர் அவர். குழந்தைகளைப் பெரியவர்கள் மதிக்கவேண்டியதன், சக உயிராக, சம உயிராக பாவிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தவர். குழந்தைகளுக்கு கல்வி என்பது, கற்றல் என்பது ஆனந்தமாக, ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து எடுத்துரைத்தவர்.

குழந்தையை வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளை, தன்னம்பிக்கையை, திறன்களைக் கொண்ட முழுமனிதனாக உருவாக்குவதே கல்வியின் முதலும் முடிவுமான நோக்கமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியவர்.

அத்தகையதொரு கல்விமுறையை உருவாக்கியவர்.

புகைப்படங்களைப் பொருள்பெயர்த்தல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, டிசம்பர் 31ஆம் நாள் பதிவேற்றப்பட்டது//

புகைப்படங்களைப் பொருள்பெயர்த்தல்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
முதல் புகைப்படத்தில் அவர்
உலகிலேயே அதிக உயரமான
மலையுச்சியில்
நின்றுகொண்டிருந்தார்.
மூன்றாவது புகைப்படத்தில் அவர்
விரிந்தகன்ற சமுத்திரக் கரையோரம்
கணுக்காலளவு அலைநீரில்
நடைபழகிக்கொண்டிருந்தார்.
முப்பதாவது புகைப்படத்தில் அவர்
அகழ்வாராய்ச்சிப் பகுதியிலிருந்த
ஆழ்குழிக்குள்
குனிந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.
முந்நூறாவது புகைப்படத்தில் அவர்
மலைப்பாம்பின் முதுகின்மீது
தலைவைத்துக்
கொஞ்சலாகப் படுத்திருந்தார்.
மூவாயிரத்தாவது புகைப்படத்தில் அவர்
மேகத்தினூடாய் மறைந்தோடும் நிலவைப் பிடிக்க காமராவைத் திரும்பிப்பார்த்தவாறே
தலைதெறிக்க ஒயிலாய் ஓடிக்கொண்டிருந்தார்.
முப்பதாயிரத்தாவது புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டதா தெரியவில்லை.
ஒருவேளை எடுக்கப்பட்டிருந்தால் அதில் அவர்
மூளைக்குள் சுற்றுலா செல்வதாக இருக்கும்
வாய்ப்புகள் அதிகம்.
இடையேயான எண்ணிறந்த புகைப்படங்களில்
பெரிய பெரிய பிரமுகர்களோடு நின்றுகொண்டிருக்கும்
அவரின் படைப்புகளை
அவரையன்றி யாரும் பேசுவதேயில்லை.

மொழித்துவம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, டிசம்பர் 23ஆம் நாள் பதிவேற்றப்பட்ட கவிதை//

மொழித்துவம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*என் முதல் கவிதைத்தொகுப்பில் - அலைமுகம் - இடம்பெற்றுள்ள கவிதை)
........................................................................................................
நீலம் சிகப்பு மஞ்சள் பச்சை
கருப்பு வெளுப்பு மா பூ பலா
கண் மருந்து பால் ஈ புறா
அது இது எது எது
தினம் கணம் நிரந்தரம்
மரணம்
ஜனனம் புனரபி
ஸாம்ஸன் தலைமுடி
தகர்தூணுறு(ரு) வரு(று)
தேவ தரிசனம்!
தண்தீச்சுட ரொளிர்
தேஜோமயம்!
நிர்விசாரம் பெருகும்
விரிவெளிக் கதவருகாய்
இருகைப்புலிரோஜா சிரித்திருக்க
காற்றுக் கடிகாரம் கூறும்
நாளை படித்தாயிற்றென!
நிலவூறி யினிக்கும் நா!
நதியெல்லாம் நெஞ்சுள்ளாய்!
நட்டதழிந்தோட ஓட
விட்ட இடம் விடியும்!
சிறுகாற் பெருவளத்தா னாட்சியில்
செக்குமாடுயர்த்திய சிறகெங்கும்
பட்டொளி வீசிப் பறக்கும் காட்சி
காணப் போதுமோ கண்கோடி!

(* சமர்ப்பணம் : குட்டித்தோழனுக்கு)

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, டிசம்பர் 26ஆம் நாள் பதிவேற்றியது//

’ஷெர்லாக் ஹோம்ஸு’ம்(நானே!) ’வாட்ஸனு’ம்(நானே!)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நகசமும் நகரசமும் 'தும்பிக்கை-தந்த'ப் பிராணியின்
ஒருபொருட்பன்மொழியாக, பல்பொருளொருமொழியாகும்
நகாயுதம் குறிக்கும் பறவைகளிலும் விலங்குகளிலு முள
கொம்பும் வாலும் கடைவாய்க் கூர்பல்லும், வளைநகமும்,
வண்ணச்சிறகும் இன்னென்னவும் பதிலியாகுமோ உன் என் ஒரு சொல்லுக்கு?
நகுலன் சிவனும் அறிஞனும் பஞ்சபாண்டவர்களில் ஒருவனும் மட்டும்தானா? நல்ல கவியும்தானே!
நகிலம் நக்கிதம் நசலுண்டாக்க,
நிழல்யுத்தம் செய்தவன் மன நகுலம் மூச்சுத்திணறும் நாகமின்றியே.
நகதியன்ன நல்வார்த்தைகள் சொல்பித்து நசைநர்
நகுதத்தினடியில் வழிநடத்திக் கிடத்த,
அந்த நக்கவாரப் பக்கவாட்டுகளி லுள்ள நீர்நிலைகளில்
நக்கரமுண்டா வென்றறியும் நகுதாவும் உண்டோ?
நகேசனின் உள்ளாழத்தில் நடுங்கத்தொடங்கிவிட்டதோ நிலம்?
என் நகரூடத்திற்கும் நகாசிக்கு மிடையே உள்ளோடும் நரம்புகளின் சிக்குகளை சிடுக்குகளை நானே நேரிடையாய் காணமுடியுமோ?
நக்கிரை, நக்குடம் என்றே நாசியைச் சுட்டும் நகாசுவேலை
நவீனமா? புராதனமா?
...............................................................................................................
(பி.கு: தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்க்க நேர்ந்தபோது ‘ந’ என்ற எழுத்தின் பக்கங்களில் கீழ்க்கண்ட பல வார்த்தைக ளையும், அவற்றிற்கான அர்த்தங்களையும் படித்தேன். மலைப்பாக இருந்தது! அதன் விளைவே இக்கவிதை! – ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
.................................................................................................................................
நகரூடன் – மூக்கு
நக்கிரை – மூக்கு
நக்குடம் - மூக்கு
நகாசி – நெற்றி
நகதி – பொன்கட்டி, கருவூலம்
நகரசம் – யானை
நகசம் – யானை
நகாசுவேலை – பொற்கொல்லர்களால் செய்யப்படும் நுணுக்கமான பொன்நகை வேலைப்பாடு
நகாயுதம் – சேவல், சிங்கம், புலி, கருடன், கழுகு
நகிலம் – பெண்ணின் மார்பகம்
நகுலம் – கீரி
நகுதா – மாலுமி
நகுத்தம் – புங்கமரம்
நகுலன் – சிவபெருமான், அறிஞன், பஞ்சபாண்டவருள் ஒருவன்
நகேசன் – மலைகட்குத் தலைவனாகிய இமயமலை.
நக்கரம் – முதலை
நக்கவாரம் – ஒரு தீவு, வறுமை
நக்கிதம் – இரண்டு
நசலாளி – நோயாளி
நசல் – நோய்
நசைநர் - நண்பர்கள்

படைப்பாற்றலும் PRம்....

 படைப்பாற்றலும் PRம்....

.......................................................................



Bigg Boss Tamil 9 இல் ஒவ்வொரு போட்டியாளரும் PR(Public Relations) வைத்திருப்பது பற்றிய விவாதம் வந்தபோது தான் யூட்யூப் காணொளி களிலிருந்து முகநூல் கணக்குகள் வரை எப்படியெல்லாம் இந்த பி.ஆர் வேலை நடக்கிறது என்பது ஓரளவுக்குத் தெரிந்தது!

ஒருவரை உயர்த்திப்பேசும் காணொளிகளை வெளியிடுவதற்கு ஒரு விலையாம்.

இன்னொருவரை இறக்கிப்பேசும் காணொளி களை வெளியிடுவதற்கு இன்னொரு விலை யாம்.

ஒருவரை உயர்த்தி இன்னொருவரைத் தாழ்த்திப் பேசும் காணொளிகளை வெளியிடுவதற்குத் தனி விலையாம்.

தகவல்கள், காட்சிகளை அதற்கேற்ப ஒட்டி வெட்டி வெளி யிடுவதற்கு இன்னொரு விலையாம்.

கேட்கக் கேட்கத் தலைசுற்றியது.

இந்த விஷயம் காட்சி ஊடகப் பிரபலங்கள் மத்தி யில் மட்டும்தான் புழங்குகிறதா? அல்லது, படைப்பாளிகள் மத்தியிலுமா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுந்தது!

ஒரு படைப்பாளியின் PR அவருடைய படைப்பு கள் தான் என்பதெல்லாம் பிற்போக்குவாதமோ என்னவோ!